Friday, December 27, 2019

1. முதற்பகவன் வழுத்து

1. முதற்பகவன் வழுத்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)


நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகம் முற்பகவனை முதலாக உடையது.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)


தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழதவராயின் நூல்களைக் கற்றவர்க்கு அக் கல்வியால் உண்டான பயன் யாதாம்?

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)


அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைத்தமட்டில் விரைந்து சென்று அமரும் இறைவனின் மாட்சியமைப்பட்ட அடிகளை அடைந்தவர் எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வர்.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)


விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் அடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் எக்காலத்தும் துன்பம் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)


இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இருவினையும் இல்லாதனவாகும்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)


மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் வழியாகக் கொண்ட ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் ஒழுகினவர் வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (7)


ஒரு வகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய திருவடிகளை அடைந்தார்க்கு அல்லாமல் மனத்தின்கண் நிகழுந் துன்பங்களையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8)


அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனும் ஆகிய இறைவனது திருவடியாகிய பனையைச் சேர்ந்தார்க்கல்லது அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின் இன்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)


எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகள் தத்தம் பலன்களைக் கொள்ளாத பொறிகளைப் போலப் பயன்படாதன வாகும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)


இறைவன் திருவடிçயாகிய புணையைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். அப் புணையைச் சேராதவர் அக் கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.

2. வான் சிறப்பு

2. வான் சிறப்பு

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. (11)


மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால், அம்மழை உலகிற்குச் சாவா மருந்து என்று கருதபெறுந் தன்மையது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (12)


உண்பார்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி அவற்றை உண்பவர்க்குத் தானும் உணவாவது மழையே.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்(து)
உண்ணின் றுடற்றும் பசி. (13)


வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின் பரந்த கடலாற் சூழற்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண் பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)


மழை என்னும் வருவாய் வரவற்றுவிடின் உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)


பெய்யாது நின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும் அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப் பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கி விடுவதும் ஆகிய எல்லாம் செய்வது மழையே.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது. (16)


வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றிப் பின் அப்பொழுதே பசும்புல் நுனி யையும் காண்பது அரிதாகும்.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின். (17)


பெருங்கடலும் தன் இயல்பு குறையும் முகில் (மேகம்) அதனைக் குறைத்துப் பின்பு தான் அதன்கண் பெய்யாது விடின்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)


மழை பெய்யாவிடின் இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டை விழாவும் நடைபெறா.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (19)


மழை பெய்யா விடின் இப் பரந்த உலகின் கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா.

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு. (20)


எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்றி உலக வாழ்வு நடவாதாயின் அந்நீர் இடையறாது ஒழுகும் மழையின்றி நிகழாது.

3. நீத்தார் பெருமை

3. நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. (21)


நூல்களது துணிவு, தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையைச் சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து)
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)


இருவகைப் பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினது என்று அளவிட்டுக் கூறப்புகின் அது, இவ்வுலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவரை யயல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம்.

இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. (23)


பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்தறிந்து பிறபபறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரயன்னும் வைப்பிற்கோர் வித்து. (24)


அறிவு என்னும் துறட்டியினால், பொறிகளாகிய யானைகள் ஜந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன், எல்லா நிலங்களும் மேலான வீட்டு நிலத்திற்குப போய் முளைத்தற்குரிய ஒரு விளைந்த மணிவிதை போலாவான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (25)


ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு அகன்ற வானத்துள்ள தேவர்க்கு அரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சானனறாளனாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)


உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர். பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.

சுவையயாளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (27)


சுவை,ஒளி,ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூத மூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும் ஆராய்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28)


பயன் நிறைந்த சொற்களுடைய துறவியரின் பெருமையை நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டி விடும்.

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது. (29)


நற்குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடி ஏறி நின்ற முனிவரின் கடுஞ் சினத்தை, சினக்கப்பட்டரால் நொடி நேர மேனுந் தடுத்தல் முடியாது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)


எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டு ஒழுகுதலால் அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் துறவியரே.

4. அறன் வலியுறுத்தல்

4. அறன் வலியுறுத்தல்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு? (31)


மறுமையில் விண்ணுலக இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும். இம்மையில் செல்வத்தையும் தரும். ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தை விடச் சிறந்த ஆக்கம் எதுதான்?

அறத்தினூஉங் ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)


ஒருவருக்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்க வழியும் இல்லை. அதை மறந்து செய்யாது விடுவதிலும் பெரிய கெடுதல் வழியும் இல்லை.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். (33)


அறமாகிய நல்வினையைத் தத்தமக்கு இயன்றவாறு அது நடைபெறக் கூடிய வழியயல்லாம் இடைவிடாது செய்க.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)


ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனாய் இருத்தலாகிய அவ்வளவே அறமாவது. மற்றப் பூச்சும் ஆடையும் அணியும் ஆகிய கோலங்கள் எல்லாம் வீண் ஆரவாரத் தன்மையன.

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம். (35)


பிறராக்கம் பொறாமையும் அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும் அதைப் பெறாவிடத்து எழும் சினமும் அது பற்றிவருங் கடுஞ்சொல்லும் ஆகிய இந்நான்கை யும் விலக்கி நடந்தே அறமாவது.

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை. (36)


யாம் இன்று இளமையாய் இருப்பதாற் பிந்தி முதுமையிற செய்வேம் என்று கடத்தி வையாது இன்றிருந்தே அறவினையைச செய்து வருக. பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. (37)


அறத்தின் பயன் இதுவென்று உரை அளவையால் ஒருவர்அறிவிக்க வேண்டிய தில்லை. பல்லக்கைச்சுமப்பானேடு அதில் ஏறிச்செல்வான் இடைப்பட்ட காட்சி அளவையாலேயே அது அறியப்படும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். (38)


செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாதவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்து வருவானாயின் அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும்.

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)


அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது. வேறு தீய வழியில் வருவன எல்லாம் இன்பம் போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே. அதோடு அவை புகழுடையனவும் ஆகா.

செயற்பால தோரும் அறனே ஒருவற்(கு)
உயற்பால தோரும் பழி. (40)


ஒருவன் என்றும் செய்யத்தக்கது நல்வினையே. செய்யாது விடத்தக்கது தீவினையே.

5. இல்வாழ்க்கை

5. இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)


இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன், இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலை பெற்ற துணையாம்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. (42)


உலகப் பற்றைத் துறந்தவர்க்கும், உண்பதற்கு இல்லா வறியர்க்கும், ஒருவரும் இன்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும் இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன் துணையாம்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்னென்றாங்(கு)
ஐம்புலத்தா றோம்பல் தலை. (43)


இறந்த முன்னோர், வழிபடு தெய்வம், விருந்தினர், ஏழையுறவினர், தன் குடும்பம் என்று சொல்லப்படும் அவ்வைந்திடத்தும் செய்ய வேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாகும்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியயஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)


ஒருவனது இல்லற வாழ்க்கை ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், அவனது மரபு வழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது. (45)


ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவும் ஆகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்? (46)


ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய துறவு நெறியற் போய்ப பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப பெறும் பயன் யாது?

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை. (47)


முறைப்படி இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன், பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையனவனாம்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)


தவஞ் செய்பவரைத் தவநெறியில் ஒழுகச் செய்து, தானும் தன அறத்தினின்று தவறாத, இல்வாழ்க்கை அத் தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை உடையது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)


இருவகை அறத்துள்ளும் அறம் என்று தமிழ் நூற்களாற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றது இல்லறமே. அவ்வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மை உடைத்தாயின் மிக நன்றாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)


இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன் இவ்வுலகத்தானே யாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

6. வாழ்க்கைத் துணை நலம்

6. வாழ்க்கைத் துணை நலம்

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)


இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய், தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்த் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள் அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம்.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (52)


இல்லறத்திற்கு ஏற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவிடத்திடத்தில் இல்லாவிடின் அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)


ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்பு உடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அம் மனைவி அச்சிறப்பு இல்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?

பெண்ணிற் பெறுந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். (54)


ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யயனப் பெய்யும் மழை. (55)


தான் மணக்கும் முன்பு தொழுது வந்த சிறு தெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது தன் கணவன் பாதங்களையே வைகறை யிறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி பெய்யயன்று சொன்னவுடன் மழை பெய்யும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)


தன் கற்பையும் உடல்நலத்தையும் காத்து, தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி, தம்இருவரையும் பற்றிய தகுதி வாய்ந்த உலக மதிப்பையும் காத்து, பிறர்க்குச் செய்யும் அறவினை களிலும் தளர்ச்சியில்லாதவள் இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.

சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (57)


பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்து வைத்தாற் போற் காக்குங் காவல் என்ன பயன்படும்? அப் பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.

பெற்றான் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58)


பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப பெறுவாராயின் தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச் செய்ய பெறுவர்.

புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. (59)


தனக்கும் தன கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவி இல்லாதார்க்கு, தம்மைப பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடை இல்லை.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60)


மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கல மாவது. நல்ல அறிவுடை மக்கட் பேறு அதற்கு அணிகலமாவது என்று கூறுவர் அறிந்தோர்.

7. மக்கட் பேறு

7. மக்கட் பேறு

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. (61)


இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக் கூடிய பிள்ளைப்பேறு அல்லாத வேறு சிறந்தவற்றை யாம் அறிந்த தில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். (62)


பழி தோன்றாத நற்குணங்களை உடைய மக்களைப் பெறின் பெற்றோரை எழுபிறவி அளவும் துன்பங்கள் அணுகா.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். (63)


தம் மக்களைத் தம் செல்வம் என்று பாராட்டுவர் பெற்றோர், அம்மக்களின் மகச் செல்வம் அவரவர் வினைக்கேற்றவாறு வரும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)


தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப்பட்ட சோறு. பெற்றோருக்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவர் உணவினும் மிக இனிமை யானதாம்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு. (65)


பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம். அவரது மழலைச் சொற்கேட்டல் தம் செவிக்கு இன்பம்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (66)


தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர் புல்லாங் குழலிசை இனிது என்றும் செங்கோட்டியாழிசை இனிது என்றுங் கூறுவர்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (67)


தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது கற்றோர் அவையின்கண் முதன்மையாய் இருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமான் ஆக்குதல்.

தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (68)


தம்மினும் மிகுதியாக, தம் மக்கள் கல்வியறியுடையராய் இருத்தல் பெற்றோராகிய தமக்கு மட்டுமின்றி இம்மண்ணுலகத்து உள்ள மற்றெல்லா மக்கட்கும்இன்பந தருவதாம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (69)


தன் மகனைக் கல்வியறிவு நிறைந்தோன் என்று அறிவுடையோர் சொல்லக்கேட்ட தாய், தான அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள்.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல். (70)


தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழிலிற் பயிற்றி , மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறு அளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம் மாறாவாது, தன்அறிவாற்றலையும் நற்குண நற்செயல் களையும் கண்டோர், இவன் தந்தை இவ்வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ் சொல்லை அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம்.