Thursday, December 26, 2019

25. அருளுடைமை

25. அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. (241)


செல்வங்கள் எல்லாவற்றுள்ளுஞ் சிறந்தது அருளாகிய செல்வமே மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ்மக்களிடத்திலும் உள்ளன.

நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றான்
மேதரினும் அஃதே துணை. (242)


உத்திக்குப் பொருத்தமான நல்ல அளவைகளால் ஆராய்ந்து பார்த்து அருளை மேற்கொள்க. பல்வேறு சமயநெறிகளால் ஆராய்ந்தாலும் இறுதியில் அவ்வருளே துணையாக முடியும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். (243)


இருள் திணிந்த துன்ப உலகமாகிய நரகத்துட் புகுதல், அருள் நிறைந்த நெஞ்சை யுடைய துறவியருக்கில்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. (244)


மற்ற உயிர்களையயல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு, தன்னுயிர் அஞ்சுவதற்கு ஏதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர்.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலம் கரி. (245)


அருள் பூண்டவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பமும் இல்லை. இதற்குக் காற்று இயங்குகின்ற வளமுள் பெரிய மாநிலத்திலுள்ள மக்கள் எல்லாரும் சான்றா ளராவர்.

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். (246)


உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுபவர் முற்பிறப்பில் அறமாகிய உறுதிப் பொருளைத் தேடாது இப்பிறப்பிலும் அதை மறத்தவர் என்பர் அறிவுடையோர்.

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்(கு)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247)


பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல அருட் செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்பம் இல்லை.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. (248)


ஏதேனும் ஒரு வகையிற் செல்வத்தை இழந்தவர், முயற்சியால் மீண்டும் ஒருகால் அதைப் பெற்றுப் பொலிவடைவர். ஆயின், அருட்பண்பை இழந்தவரோ ஒரேடியாய் அழிந்தவராவர்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். (249)


உயிர்களிடத்து அருள் செய்யாதவன் செய்யும் அறத்தின் தன்மையை ஆராயின் தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருள் உணர்ந்தாற்போலும்.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. (250)


ஒருவன் அருள் இல்லாமையால் தன்னினும் எளியவரை வருத்துமாறு அவர்மேற் செல்லும் பொழுது, தன்னினும் வலியவர் தன்னை வருத்த வரும் போது தான் அவர்முன் அஞ்சிநிற்கும் நிலையை நினைக்க.

No comments:

Post a Comment