Thursday, December 26, 2019

32. இன்னாசெய்யாமை

32. இன்னாசெய்யாமை

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (311)


சிறப்பைத் தரும் பெருஞ்செல்வம் பிறரை வருத்திப் பெறக்கூடுமாயினும் அதைப் பெறுதற்குப் பிறர்க்குத் தீங்கு செய்யாமை குற்றமற்ற பெரியோர் கொள்கையாம்.

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (312)


ஒருவன் தம்மேற்கறுவு கொண்டு தீயவற்றைச் செய்தவிடத்தும் திருப்பித் தாம் அவனுக்குத் தீயவை செய்யாமையும் குற்றமற்ற பெரியோர் கொள்கையாம்.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். (313)


தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமை கொண்டு தீங்கு செய்த வர்க்கும் துறவு பூண்டவன் தீயவற்றைச் செய்வானாயின் அச்செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத் தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (314)


தமக்குத் தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாம்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. (315)


பிறிதோர் உருயிர்க்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்தன போலக் கருதிக் காவா விடத்து உயிர்களின் இயல்பைப் பற்றி அறிந்த அறிவி னால் ஏதேனும் ஒரு பயனுண்டோ?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். (316)


இவை மக்கட்குத் தீங்கு விளைப்பன என நால்வகை அளவைகளாலும் தான் அளந்து அறிந்தவற்றைப் பிறனிடத்துச் செய்தலைப் பொருந்தாமை துறந்தவனுக்கு வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. (317)


மனத்தோடு கூடிய தீய செயல்களை எக்காலத்தும் எவர்க்கும் எத்துணைச் சிறிதும் செய்யாதிருத்தல் தலைமையான அறமாம்.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். (318)


பிறர் செய்யுந் தீயவை தனக்குத் தீயனவாயிருக்குந் தன்மையைப் பட்டறிகின்றவன் தான் மட்டும் மற்றவர்கட்குத் தீயவை செய்தல் என்ன கரணியம் (காரணம்) பற்றியோ!

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். (319)


ஒருவர் பிறருக்குத் தீயவற்றை ஒரு பகலின் முற்பகுதியிற் செய்வாராயின் அதன் விளைவாகத் தமக்குத் தீயவை அப்பகலின் பிற்பகுதியில் அவர் செய்யாமல் தாமே வரும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (320)


துன்பங்கள் எல்லாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பினும் பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்தாரையே சார்வனவாம். ஆதலால், தம் உயிர்க்குத் துன்பம் வேண்டாதவர் பிறிதோர் உயிர்க்குத் துன்பஞ் செய்யார்.

No comments:

Post a Comment