Thursday, December 26, 2019

100. பண்புடைமை

100. பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. (991)


எல்லாரிடத்தும் எளிய செவ்வியராய் இருந்தலால் பண்புடையராய் ஒழுகும் நெறியை எளிதாய் அடையலாம் என்று கூறுவர் அறநூலார்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. (992)


எல்லார் மேலும் அன்புடைமையும், எல்லா நல்லிணக்கமும் அமைந்த குடியிற் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் பண்புடைமை என்னும் ஒழுக்கத்திற்கு இன்றி யமையாத இயல்களாம்.

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. (993)


உயிரொடு பொருந்தாத முகவுறுப்பால் அல்லது முழுவுடம்பால் ஒத்திருப் பது ஒருவனுக்கு நன்மக்களை ஒக்கும் ஒப்பாகாது. உயிரொடு பொருந்தத் தக்க பண்பினால் ஒத்தலே உண்மையாக ஓக்கும் ஒப்பாம்.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. (994)


நேர்பாட்டையும் (நீதியையும்) நல்வினையையும் விரும்புதலாற் பிறர்க்குப் பயன்படும் நல்லோர் பண்பை உலகத்தார் போற்றிப் புகழ்வர்.

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. (995)


விளையாட்டாகவேனும் ஒருவரைப் பழித்தல் அவருக்குத் துன்பந் தருவதாம். ஆதலால் பாடறிந்து ஒழுகுவாரிடத்திற் பகைமை உள்ள போதும் இனிய பண்புகளே உண்டாவன்.

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன். (996)


உலக நடப்பு பண்பு உடையாரிடத்துப் படுதலால் இடையறாது தொடர்ந்து வருகின்றது. அங்ஙனம் இல்லாக்கால் அது மண்ணுட் புகுந்து மறைந்து போவதாம்.

அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர். (997)


நன்மாந்தர்க்கு உரிய பண்பு இல்லாதவர், அரத்தின் கூர்மை போலுங் கூரிய மதியுடையரேனும் அறுக்குங் கூர்மை இல்லாத மரத்தையே ஒப்பர்.

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. (998)


தம்மொடு நட்புக் கொள்ளாது தமக்குத் தீமையே செய்தொழுகுவார் இடத்தும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க்குக் கடைப் பட்ட குற்றமாம்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள். (999)


பண்பு இன்மையால் ஒருவரோடுங் கலந்து உரையாடி மகிழுந் திறமில் லாதவர்க்கு மிகப்பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்தி ருப்பதாகும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று. (1000)


பண்பு இல்லாதவன் பழம்பிறப்பிற் செய்த நல்வினையின் பயனாக அடைந்த பெருஞ்செல்வம் ஒருவற்கும் பயன்படாது கெடுதல், நல்ல ஆவின் பால் வார்த்த கலத்தின் குற்றத்தாற் களிம்பேறிக் கெட்டாற் போலும்.

No comments:

Post a Comment