Thursday, December 26, 2019

16. பொறை யுடைமை

16. பொறை யுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151)


தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போலத் தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (152)


பொறை நன்று ஆதலால், பிறர் செய்த மிகையை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க. இனி, அதை மனத்திற் கொள்ளாது அப்பொழுதே அடியோடு மறக்க முடியுமாயின் அது அப்பொறையினும் நன்றாம்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (153)


ஒருவனுக்கு வறுமையுள் வறுமையானது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல். அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். (154)


ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின், அவனாற் பொறையுடைமை பேணிக்காத்து ஒழுகப்படும்.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (155)


பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார். ஆனால், அத்தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக்கொள்வர்.

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (156)


தமக்குத்தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே. ஆனால் அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று. (157)


செய்யத் தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் அதனால் வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறன் அல்லாதவற்றைத் தான் அவர்க்குச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். (158)


செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரைத் தாம் தம் பொறையினால் வென்று விடுக.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். (159)


நெறிகடந்த கீழ்மக்களின் வாயினின்று வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மேன்மக்கள் இல்லறத்தின் கண் நின்றாலும் துறவியர் போல மனத் தூய்மையுடைய ராவர்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (160)


நோன்பினால் உணவைத் தவிர்த்துப் பசியையும், வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் துறவியர் மக்கட்குட் பெரியவரே. ஆயின் அவர் பெரியவராவது பிறர்சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்த படியே.

No comments:

Post a Comment