Thursday, December 26, 2019

33. கொல்லாமை

33. கொல்லாமை

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். (321)


முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓர் உயிரையுங் கொல்லாமையாம். கொலைவினை பிற தீவினைகள் எல்லாவற்றின் பயனையும் ஓருங்கே தரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (322)


கிடைத்த உணவை இயன்றவரை பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு பல்வகை உயிர்களைளயும் பாதுக்காத்தல், அறநூலோர் இருவகை அறத்தார்க்குந் தொகுத்த அறங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயதாம்.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. (323)


முதற்படியாக நல்லறமாவது கொல்லாமையே. அதற்கு அடுத்தப்படியாக நல்லது வாய்மையாம்.

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி. (324)


பேரின்ப வீடுபேற்றிற்கு நல்ல வழியயன்று சொல்லப்படுவது எது என வினவின் அது எவ்வுயிரையும் கொல்லாமையைக் கருதும் நெறியாகும்.

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (325)


பிறவி நிலைமைக்கு அஞ்சி அதனின்று விடுதலை பெறும் பொருட்டு உலகப் பற்றைத் துறந்தவருள் எல்லாம் கொலை வினைக்கு அஞ்சிக் கொல்லா அறத்தைக் கடைப்பிடிப்பவன் தலையாவான்.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று. (326)


கொல்லாமையைக் கடைப்பிடித்து ஓழுகுபவனின் வாழ்நாள்மேல் உயிரைக் கவரும் கூற்றுவன் செல்லமாட்டான்.

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327)


ஓர் உயிரியைக் கொல்லாத வழித் தன்னுயிர் தன் உடம்பினின்று நீங்கிவிடு மாயினும், தான் பிறிதோர் உயிரின் இனிய வுயிரை அதன் உடம்பினின்று நீக்கும் செயலைச் செய்யற்க.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. (328)


தேவரை நோக்கிச் செய்யும் வேள்வியிற் கொன்றால் இன்பமாகும் செல்வம் பெரிதாம் என்று ஆரியர் கூறினும் தமிழ்ச் சான்றோர்க்குக் கொல்வதினால் வரும் செல்வம் மிக இழிவானதாம்.

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. (329)


வேள்வியிலும் பிறவிடத்தும் கொலைத் தொழிலைச் செய்யும் பகுத்தறிவில்லா மாந்தர், தம்மை மக்களுள் உயர்ந்தோராகச் சொல்லிக் கொள்ளினும் அத் தொழிலின் கீழ்மையை அறியும் அறிவுடையோர் நெஞ்சத்துப் புலைத் தொழிலோ ராவர்.

உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். (330)


அருவருப்பான நோயுடம்புடன் வறுமை கூர்ந்து இழிதொழில் செய்து உயிர் வாழ்ப வரை, முற்பிறப்பில் உண்ணும் பொருட்டு உயிர்களை அவை நின்ற உடம்பினின்று நீக்கியவர் என்று சொல்வர் வினைப்பயன் அறிந்தோர்.

No comments:

Post a Comment