Friday, December 27, 2019

10. இனியவை கூறல்

10. இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)


இனிய செல்லாவன அன்பு கலந்து வஞ்சனை இல்லாத மெய்ப் பொருளை அறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள்.

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின். (92)


ஒருவரைக் கண்ட பொழுதே முகமலர்ந்து இனியசொல்லும் உடையனாகப் பெறின், அது மனம் உவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம்.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (93)


ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி, பின்பு நெருங்கியவிடத்து அகமலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை உடையதே அறமாவது.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. (94)


யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்குத் துன்புறுத்தும் வறுமை இலதாகும்.

பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்(கு)
அணியல்ல மற்றுப் பிற. (95)


ஒருவனுக்கு அணியாவன அடக்கம் உடைமையும் இன்சொல் உடமையுமாம். மற்றப் பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (96)


விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து, அவற்றைச் செவிக்கு இனிதாக ஒருவன் சொல்வானாயின் அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும்.

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (97)


விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல், இம்மைக்கு நேர்பாட்டை (நீதியை) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும். (98)


விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. (99)


பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்து அறிகின்றவன் தான் மட்டும் பிறரிடத்தில் வன்சொல்லை ஆள்வது என்ன பயன் கருதியோ!

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100)


தனக்கு அறமும் பிறர்க்கு இன்பமும் பயக்கும் இனிய சொற்களும் எளிதாய் வழங்குமாறு தன்னிடத்தில் இருக்கவும், அவற்றை வழங்காது தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ் சொற்களை ஒருவன் வழங்குதல் இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவு மான கனிகளும் கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக இருக்கவும், அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றைப் பறித்து உண்டல் ஒக்கும்.

No comments:

Post a Comment