Friday, December 27, 2019

12. நடுவு நிலைமை

12. நடுவு நிலைமை

தகுதி யயனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட் டொழுகப் பெறின். (111)


பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப்பெறின் நேர்மை என்று சொல்லப்படும் ஓர் அறமே நல்லதாம்.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து. (112)


நடுவுநிலைமை உடையவனது செல்வம், பிறர் செல்வம் போல் அழியாது வழியினர்க்கும் வலிமையாதலை உடையது. (வலிமை பாதுகாப்பு)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். (113)


அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும் நடுவுநிலை திறம்பு வதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (114)


இவர் நேர்மையுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உணமை அவரவருடைய மக்களால் அறியப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115)


பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால், அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாதவை அல்ல. ஆதலால் இவ் வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை, அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (116)


ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருது மாயின் அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு, ‘நான் இனிக் கேடடைவேன்’ என்று திட்டமாய் அறிந்து கொள்க.

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் அடங்கியான் தாழ்வு. (117)


நடுநிலை நின்று அறத்தின்கண் தங்கினவனது வறுமையை உயர்ந்தோர் கேடாகக் கருதார்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (118)


இயல்பாகச் சமனாக நின்று தன்கண் வைத்த பொருளின் நிறையை வரை யறுத்துக் காட்டும் துலாக்கோல் போல மனத்திற் சம நிலையாக இருந்து ஒரு பக்கஞ் சாயாது உண்மை உரைத்தல் அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். (119)


நடுவுநிலைமையாவது ஆய்ந்து கூறும் தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லதாம். அது அங்ஙனம் நிகழ்வது மனத்தின்கண் கோட்டம் இன்மையை முழுவுறுதியாகப் பெற்றவிடத்தே.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின். (120)


பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின் வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம்.

No comments:

Post a Comment