11. செய்ந்நன்றி யறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. (101)
தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருக்கும் ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவை ஈடு செய்தல் அரிது.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)
ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த உதவி பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாய் இருந்தாலும், அக்கால நிலை நோக்க நிலவு லகத்திலும் பெரிதாம்.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. (103)
இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்கும் என்று ஆராயாது ஒருவர் செய்த உதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின் அதன் நன்மை கடலினும் பெரிய தாம்.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (104)
தினை அளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானா யினும் அதன் பயனை அறிந்தவர் அதைப் பனை அளவினதாகிய பேருதவியாகக் கருதுவர்.
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105)
கைமாறான உதவி காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகை யானும் முன் செய்த உதவி அளவினதன்று. அதனைச் செய் வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (106)
துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. (107)
தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவு உடையோர்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று. (108)
ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று. அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும். (109)
தமக்கு முன்பு ஒருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற பெருந் தீமைகளைச் செய்தாராயினும் அவையயல்லாம் அவர் செய்த நன்மை யயான் றையே நினைத்த மட்டில் நன்றியறிவு உடையார் மனத்தில் இல்லாமல் மறைந்து போம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)
எத்துணைப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத் தீவினைகள் நீங்கும் கழுவாய் (பிராயச் சித்தம்) உண்டாம். ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்த வனுக்கோ தப்பும் வழியே இல்லை.
No comments:
Post a Comment