Friday, December 27, 2019

2. வான் சிறப்பு

2. வான் சிறப்பு

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. (11)


மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால், அம்மழை உலகிற்குச் சாவா மருந்து என்று கருதபெறுந் தன்மையது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (12)


உண்பார்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி அவற்றை உண்பவர்க்குத் தானும் உணவாவது மழையே.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்(து)
உண்ணின் றுடற்றும் பசி. (13)


வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின் பரந்த கடலாற் சூழற்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண் பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)


மழை என்னும் வருவாய் வரவற்றுவிடின் உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)


பெய்யாது நின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும் அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப் பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கி விடுவதும் ஆகிய எல்லாம் செய்வது மழையே.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது. (16)


வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றிப் பின் அப்பொழுதே பசும்புல் நுனி யையும் காண்பது அரிதாகும்.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின். (17)


பெருங்கடலும் தன் இயல்பு குறையும் முகில் (மேகம்) அதனைக் குறைத்துப் பின்பு தான் அதன்கண் பெய்யாது விடின்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)


மழை பெய்யாவிடின் இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டை விழாவும் நடைபெறா.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (19)


மழை பெய்யா விடின் இப் பரந்த உலகின் கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா.

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு. (20)


எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்றி உலக வாழ்வு நடவாதாயின் அந்நீர் இடையறாது ஒழுகும் மழையின்றி நிகழாது.

No comments:

Post a Comment