Thursday, December 26, 2019

53. சுற்றந் தழால்

53. சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. (521)


ஒருவன் செல்வம் அல்லது அதிகாரம் தொலைந்து வறியனானதின் விளை வாகத் தொடர்பு நீங்கிய விடத்தும், அவனொடு தமக்கிருந்த பழைய உற வைச் சொல்லிப் பாராட்டும் இயல்புகள் உறவினரிடத்திலேயே உள்ளன.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். (522)


அன்பு நீங்காத உறவினம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அது அவனுக்கு மேன் மேலும் கிளரும் பல்வகைச் செல்வத்தை உண்டாக்கும்.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. (523)


உறவினத்தொடு உள்ளக் கலப்பு இல்லாதவன் செல்வவாழ்க்கை, குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போலும்.

சுற்றத்தால் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். (524)


ஒருவன் செல்வம் பெற்றதனாற் பெற்ற பயனாவது தன் உறவினத்தால் தான் சூழப்படும் வகை அதைத் தழுவி ஒழுகுதலாம்.

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். (525)


ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் சொல் லுதலையும் ஆற்ற வல்லனாயின் அவன், ஒன்றோடொன்றாகத் தொடர்ந்த பல்வகை உறவினத்தாற் சூழப்படுவான்.

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில். (526)


ஒருவன் பெருங்கொடையாளியும் சினத்தை வெறுப்பவனுமாய் இருப்பின் அவன் போலச் சுற்றத்தையுடையோர் இவ்வுலகத்தில் இல்லை.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. (527)


காகங்கள் தமக்கு இரையான பொருள் கண்டவிடத்து அதனை மறையாது தம் இனத்தைச் கரைந்து அழைத்து அதனொடு கூட உண்ணும். சுற்றத்தோடு கூடி நுகருஞ் செல்வங்களும் அத்தன்மையார்க்கே உண்டாம்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (528)


அரசன் எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின் சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் உறவினர் பலராவர்.

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். (529)


முன்பு அன்பான உறவினராயிருந்து ஏதேனும் ஒரு தக்க கரணியம் பற்றித் தன்னைவிட்டு பிரிந்து போனவர் மீண்டும் வந்து அன்பாக உறவாடல், இடையில் அன்பாற் பொருந்தாமைக்கு ஏதுவாயிருந்த நிலைமை நீங்கின் தானே நேர்வதாம்.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல். (530)


கரணியமின்றித் தன்னிடத்தினின்று பிரிந்துபோய்ப் பின்பு ஒரு பயன் நோக்கித் திரும்பி வந்த உறவினனை, அரசன் அப்பயனைச் செய்து வைத்து ஆராய்ந்து தழுவிக் கொள்க.

No comments:

Post a Comment