Thursday, December 26, 2019

31. வெகுளாமை

31. வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கால் என். (301)


சினம் தாக்கக்கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவன். அல்லாத வலிய இடத்தில் அதுதானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தால் என், தடுக்காவிட்டால் என்? இரண்டும் ஒன்றுதானே!

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற. (302)


ஒருவனது சினம் அது தாக்க முடியாத வலியார் மேல் எழின் தனக்கே தீங்காம். அது தாக்கக்கூடிய எளியார் மேல் எழினும் அதைவிடத் தீயவை வேறில்லை.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். (303)


எத்தகையோரிடத்தும் சினங் கொள்ளுதலைக் கருதுவதுஞ் செய்யற்க. அதனால் பல்வகையான தீமைகள் உண்டாகும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (304)


இல்லறத்தார்க்கு அன்பாலும் துறவறத்தார்க்கு அருளாலும் முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியையும் மனத்தின்கண் உண்டாகும் மகிழ்ச்சியையும் கெடுத்து எழுகின்ற சினம் அல்லாது வேறு பகைகளும் உண்டோ? இல்லை.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். (305)


ஒருவன் தனக்குத் துன்பம் நேராமற் காக்க விரும்பினானாயின் தன் மனத்திற் சினம் வராமற் காக்க. காவானாயின் அச்சினம் தன்னையே கெடுக்குங் கடுந் துன்பங்களை வருவிக்கும்.

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (306)


சினம் என்னும் நெருப்பு தன்னைச் சேர்ந்தவரை மட்டுமின்றி, அவருக்குத் துன்பக் காலத்தில் ஏமப்புணைபோல் உதவும் இனத்தாராகிய தன்னைச் சேராதவரையுஞ் சுடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (307)


சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்தும் சிறந்த பண்பென்று பொருட்படுத்தி அதைக் கொண்டவன் கெடுதல், நிலத்தின்கண் அறைந்தவன் கை தப்பாது நோவுறுதல் போன்றதாம்.

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (308)


கொத்தான நாவுகளுள்ள பெருந்தீ வந்து சுட்டாற் போன்ற தீங்குகளை ஒருவன் தொடர்ந்து செய்தானாயினும் அவனைச் சினவாமை கூடுமாயின் நன்றாம்.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். (309)


தவஞ்செய்வான் தன் மனத்தாற் சினத்தை ஒருபோதங் கருதான் எனின் அவன் பெறக்கருதிய பேற்றையயல்லாம் ஒருங்கே பெறுவான்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (310)


சினத்தின்கண் அளவுகடந்தவர், உயிரோடு இருப்பினும் செத்தவரைய யாப்பர். சினத்தை முற்றும் விட்டவர் இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தார் அளவின ராவர்.

No comments:

Post a Comment