Thursday, December 26, 2019

48. வலியறிதல்

48. வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (471)


தான் செய்யத் துணிந்த வினைவலிமையும் அதைச் செய்தற்கு இருக்கும் தன்வலிமையும், அதை எதிர்க்க பகைவன் வலியையும், இருவர்க்குந் துணையாக வருவார் வலியையும் ஆராய்ந்து பார்த்துத் தன்வலி மிகுமா யின் அவ்வினையைச் செய்க.

ஒல்வ தறிவ தறித்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். (472)


தம்மாற் செய்தற்கு இயலும் வினையையும் அதன் தொடர்பாக அறியவேண்டியது எல்லாவற்றையும் அறிந்து அம்முயற்சியில் உறுதியாக மனத்தை ஊன்றிப் பகைமேற் செல்லும் அரசர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். (473)


தம்முடைய உண்மையான வலியளவைச் சரியாக அளந்தறியாது தம் மன எழுச்சி மிகையால் தம்மினும் வலியாரொடு போர்செய்ய முயன்று அவர் தாக்குதலைப் பொறுக்கும் ஆற்றல் இன்றி இடையே கெட்டுப்போன அரசர் உலகத்திற் பலராவர்.

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். (474)


வேற்றரசரோடு பொருந்தி அதற்கு எற்ப நடந்து கொள்ளாமலும், தன் வலியளவை அறியாமலும், தன்னை உயர்வாக மதித்து அவரொடு பகைகொண்ட அரசன் விரைந்து கெடுவான்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். (475)


வைக்கோலினும் நொய்ய மயில்தோகை ஏற்றிய வண்டியும் அச்சு முறியும், அப்பொருளை வண்டி தாங்கும் அளவிற்கு மிஞ்சி ஏற்றின்.

நுனிக் கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும். (476)


ஒருமரத்தின் உச்சிக்கிளையில் ஏறி நின்றவர் தம் ஊக்கத்தினால் அதன் மேலும் ஏற முயன்றவாராயின் அம்முயற்சியால் அவர் உயிர்க்கு முடிவு நேர்ந்துவிடும்.

ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. (477)


ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் அளவறிந்து அதற்குத் தக்கவாறு அளவாக ஈக. அதுவே செல்வத்தைப் பேணிகாத்து ஈந்தொழுகும் வழியாம்.

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை. (478)


அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும் செவ்வாயின் அளவு அதினும் மிகாவிடத்துக் கெடுதல் இல்லை.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)


தன் செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கையில், அவன் பல்வகைப்பட்ட பொருட்களும் உள்ளனபோலத் தோன்றி உண்மையில் இல்லா தனவாய்ப் பின்பு அப்பொய்த் தோற்றமும் இல்லாது அழியும்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். (480)


தனக்குள்ள ஈகைவலி அளவை நோக்காது செய்யும் ஒப்புரவொழுகலால் ஒருவனது செல்வத்தின் அளவு விரைந்து கெடும்.

No comments:

Post a Comment