Thursday, December 26, 2019

13. அடக்க முடைமை

13. அடக்க முடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)


அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகததிற்கு கொண்டு போய்ச் சேர்க்கும். அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கு அரிய இருள் உலகத்திற்குச் செலுத்திவிடும்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு. (122)


அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்கட்கு அதனினுஞ் சிறந்து ஆக்கந் தருவது வேறொன்றும் இல்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123)


ஒருவன் அறியத் தக்க நூல்களை அறிந்து இல்லறத்தின்கண் அடங்கி ஒழுகுவா னாயின், அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த தன்மையை விளைவிக்கும்.

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (124)


இல்லறத்தின்கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி மலை உயர்ச்சி யினும் மிகப் பெரிது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. (125)


செருக்கின்றி அடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம். ஆயினும் அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. (126)


ஆமையானது, தனக்குத் தீங்கு நேராதவாறு, தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலும் ஆகிய ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளுதல் போல இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின் அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127)


மக்கள் வேறு எவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க. அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். (128)


ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றே னும் பிறர்க்கு உண்டாயின், அவன் ஏற்கனவே செய்துள்ள பிற அறங்கள் பயன்படா மற்போம்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)


ஒருவன் ஒருவனை நெருப்பினாற் சுட்ட புண், காட்சிப் பொருளாகிய உடம்மையே சுட்டதினால் அப்பொழுதேயோ அப்புண் ஆறின. பின்போ உள்ளத்தில் ஆறிவிடும். ஆயின் நாவினாற் சுட்ட புண்ணோ, கருத்துப் பொருளாகிய உள்ளத்தைச் சுட்டதினால், ஒருகாலும் ஆறாது அதன் கண்ணே நிற்கும்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130)


அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கி யயாழுக வல்லவனின் செவ்விய மனநிலையை, அறத்தெய்வம் அவனைத் தலைக் கூடுமாறு அவனை யடையும் வழிச்சென்று நுணுகி நோக்கும்.

No comments:

Post a Comment