Friday, December 27, 2019

1. முதற்பகவன் வழுத்து

1. முதற்பகவன் வழுத்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)


நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகம் முற்பகவனை முதலாக உடையது.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)


தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழதவராயின் நூல்களைக் கற்றவர்க்கு அக் கல்வியால் உண்டான பயன் யாதாம்?

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)


அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைத்தமட்டில் விரைந்து சென்று அமரும் இறைவனின் மாட்சியமைப்பட்ட அடிகளை அடைந்தவர் எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வர்.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)


விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் அடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் எக்காலத்தும் துன்பம் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)


இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இருவினையும் இல்லாதனவாகும்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)


மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் வழியாகக் கொண்ட ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் ஒழுகினவர் வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (7)


ஒரு வகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய திருவடிகளை அடைந்தார்க்கு அல்லாமல் மனத்தின்கண் நிகழுந் துன்பங்களையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8)


அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனும் ஆகிய இறைவனது திருவடியாகிய பனையைச் சேர்ந்தார்க்கல்லது அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின் இன்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)


எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகள் தத்தம் பலன்களைக் கொள்ளாத பொறிகளைப் போலப் பயன்படாதன வாகும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)


இறைவன் திருவடிçயாகிய புணையைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். அப் புணையைச் சேராதவர் அக் கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.

2. வான் சிறப்பு

2. வான் சிறப்பு

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. (11)


மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால், அம்மழை உலகிற்குச் சாவா மருந்து என்று கருதபெறுந் தன்மையது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (12)


உண்பார்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி அவற்றை உண்பவர்க்குத் தானும் உணவாவது மழையே.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்(து)
உண்ணின் றுடற்றும் பசி. (13)


வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின் பரந்த கடலாற் சூழற்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண் பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)


மழை என்னும் வருவாய் வரவற்றுவிடின் உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)


பெய்யாது நின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும் அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப் பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கி விடுவதும் ஆகிய எல்லாம் செய்வது மழையே.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது. (16)


வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றிப் பின் அப்பொழுதே பசும்புல் நுனி யையும் காண்பது அரிதாகும்.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின். (17)


பெருங்கடலும் தன் இயல்பு குறையும் முகில் (மேகம்) அதனைக் குறைத்துப் பின்பு தான் அதன்கண் பெய்யாது விடின்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)


மழை பெய்யாவிடின் இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டை விழாவும் நடைபெறா.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (19)


மழை பெய்யா விடின் இப் பரந்த உலகின் கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா.

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு. (20)


எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்றி உலக வாழ்வு நடவாதாயின் அந்நீர் இடையறாது ஒழுகும் மழையின்றி நிகழாது.

3. நீத்தார் பெருமை

3. நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. (21)


நூல்களது துணிவு, தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையைச் சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து)
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)


இருவகைப் பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினது என்று அளவிட்டுக் கூறப்புகின் அது, இவ்வுலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவரை யயல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம்.

இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. (23)


பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்தறிந்து பிறபபறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரயன்னும் வைப்பிற்கோர் வித்து. (24)


அறிவு என்னும் துறட்டியினால், பொறிகளாகிய யானைகள் ஜந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன், எல்லா நிலங்களும் மேலான வீட்டு நிலத்திற்குப போய் முளைத்தற்குரிய ஒரு விளைந்த மணிவிதை போலாவான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (25)


ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு அகன்ற வானத்துள்ள தேவர்க்கு அரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சானனறாளனாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)


உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர். பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.

சுவையயாளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (27)


சுவை,ஒளி,ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூத மூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும் ஆராய்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28)


பயன் நிறைந்த சொற்களுடைய துறவியரின் பெருமையை நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டி விடும்.

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது. (29)


நற்குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடி ஏறி நின்ற முனிவரின் கடுஞ் சினத்தை, சினக்கப்பட்டரால் நொடி நேர மேனுந் தடுத்தல் முடியாது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)


எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டு ஒழுகுதலால் அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் துறவியரே.

4. அறன் வலியுறுத்தல்

4. அறன் வலியுறுத்தல்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு? (31)


மறுமையில் விண்ணுலக இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும். இம்மையில் செல்வத்தையும் தரும். ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தை விடச் சிறந்த ஆக்கம் எதுதான்?

அறத்தினூஉங் ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)


ஒருவருக்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்க வழியும் இல்லை. அதை மறந்து செய்யாது விடுவதிலும் பெரிய கெடுதல் வழியும் இல்லை.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். (33)


அறமாகிய நல்வினையைத் தத்தமக்கு இயன்றவாறு அது நடைபெறக் கூடிய வழியயல்லாம் இடைவிடாது செய்க.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)


ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனாய் இருத்தலாகிய அவ்வளவே அறமாவது. மற்றப் பூச்சும் ஆடையும் அணியும் ஆகிய கோலங்கள் எல்லாம் வீண் ஆரவாரத் தன்மையன.

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம். (35)


பிறராக்கம் பொறாமையும் அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும் அதைப் பெறாவிடத்து எழும் சினமும் அது பற்றிவருங் கடுஞ்சொல்லும் ஆகிய இந்நான்கை யும் விலக்கி நடந்தே அறமாவது.

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை. (36)


யாம் இன்று இளமையாய் இருப்பதாற் பிந்தி முதுமையிற செய்வேம் என்று கடத்தி வையாது இன்றிருந்தே அறவினையைச செய்து வருக. பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. (37)


அறத்தின் பயன் இதுவென்று உரை அளவையால் ஒருவர்அறிவிக்க வேண்டிய தில்லை. பல்லக்கைச்சுமப்பானேடு அதில் ஏறிச்செல்வான் இடைப்பட்ட காட்சி அளவையாலேயே அது அறியப்படும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். (38)


செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாதவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்து வருவானாயின் அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும்.

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)


அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது. வேறு தீய வழியில் வருவன எல்லாம் இன்பம் போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே. அதோடு அவை புகழுடையனவும் ஆகா.

செயற்பால தோரும் அறனே ஒருவற்(கு)
உயற்பால தோரும் பழி. (40)


ஒருவன் என்றும் செய்யத்தக்கது நல்வினையே. செய்யாது விடத்தக்கது தீவினையே.

5. இல்வாழ்க்கை

5. இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)


இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன், இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலை பெற்ற துணையாம்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. (42)


உலகப் பற்றைத் துறந்தவர்க்கும், உண்பதற்கு இல்லா வறியர்க்கும், ஒருவரும் இன்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும் இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன் துணையாம்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்னென்றாங்(கு)
ஐம்புலத்தா றோம்பல் தலை. (43)


இறந்த முன்னோர், வழிபடு தெய்வம், விருந்தினர், ஏழையுறவினர், தன் குடும்பம் என்று சொல்லப்படும் அவ்வைந்திடத்தும் செய்ய வேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாகும்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியயஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)


ஒருவனது இல்லற வாழ்க்கை ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், அவனது மரபு வழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது. (45)


ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவும் ஆகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்? (46)


ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய துறவு நெறியற் போய்ப பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப பெறும் பயன் யாது?

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை. (47)


முறைப்படி இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன், பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையனவனாம்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)


தவஞ் செய்பவரைத் தவநெறியில் ஒழுகச் செய்து, தானும் தன அறத்தினின்று தவறாத, இல்வாழ்க்கை அத் தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை உடையது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)


இருவகை அறத்துள்ளும் அறம் என்று தமிழ் நூற்களாற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றது இல்லறமே. அவ்வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மை உடைத்தாயின் மிக நன்றாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)


இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன் இவ்வுலகத்தானே யாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

6. வாழ்க்கைத் துணை நலம்

6. வாழ்க்கைத் துணை நலம்

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)


இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய், தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்த் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள் அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம்.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (52)


இல்லறத்திற்கு ஏற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவிடத்திடத்தில் இல்லாவிடின் அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)


ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்பு உடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அம் மனைவி அச்சிறப்பு இல்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?

பெண்ணிற் பெறுந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். (54)


ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யயனப் பெய்யும் மழை. (55)


தான் மணக்கும் முன்பு தொழுது வந்த சிறு தெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது தன் கணவன் பாதங்களையே வைகறை யிறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி பெய்யயன்று சொன்னவுடன் மழை பெய்யும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)


தன் கற்பையும் உடல்நலத்தையும் காத்து, தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி, தம்இருவரையும் பற்றிய தகுதி வாய்ந்த உலக மதிப்பையும் காத்து, பிறர்க்குச் செய்யும் அறவினை களிலும் தளர்ச்சியில்லாதவள் இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.

சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (57)


பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்து வைத்தாற் போற் காக்குங் காவல் என்ன பயன்படும்? அப் பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.

பெற்றான் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58)


பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப பெறுவாராயின் தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச் செய்ய பெறுவர்.

புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. (59)


தனக்கும் தன கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவி இல்லாதார்க்கு, தம்மைப பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடை இல்லை.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60)


மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கல மாவது. நல்ல அறிவுடை மக்கட் பேறு அதற்கு அணிகலமாவது என்று கூறுவர் அறிந்தோர்.

7. மக்கட் பேறு

7. மக்கட் பேறு

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. (61)


இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக் கூடிய பிள்ளைப்பேறு அல்லாத வேறு சிறந்தவற்றை யாம் அறிந்த தில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். (62)


பழி தோன்றாத நற்குணங்களை உடைய மக்களைப் பெறின் பெற்றோரை எழுபிறவி அளவும் துன்பங்கள் அணுகா.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். (63)


தம் மக்களைத் தம் செல்வம் என்று பாராட்டுவர் பெற்றோர், அம்மக்களின் மகச் செல்வம் அவரவர் வினைக்கேற்றவாறு வரும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)


தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப்பட்ட சோறு. பெற்றோருக்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவர் உணவினும் மிக இனிமை யானதாம்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு. (65)


பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம். அவரது மழலைச் சொற்கேட்டல் தம் செவிக்கு இன்பம்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (66)


தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர் புல்லாங் குழலிசை இனிது என்றும் செங்கோட்டியாழிசை இனிது என்றுங் கூறுவர்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (67)


தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது கற்றோர் அவையின்கண் முதன்மையாய் இருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமான் ஆக்குதல்.

தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (68)


தம்மினும் மிகுதியாக, தம் மக்கள் கல்வியறியுடையராய் இருத்தல் பெற்றோராகிய தமக்கு மட்டுமின்றி இம்மண்ணுலகத்து உள்ள மற்றெல்லா மக்கட்கும்இன்பந தருவதாம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (69)


தன் மகனைக் கல்வியறிவு நிறைந்தோன் என்று அறிவுடையோர் சொல்லக்கேட்ட தாய், தான அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள்.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல். (70)


தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழிலிற் பயிற்றி , மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறு அளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம் மாறாவாது, தன்அறிவாற்றலையும் நற்குண நற்செயல் களையும் கண்டோர், இவன் தந்தை இவ்வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ் சொல்லை அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம்.

8. அன்புடைமை

8. அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (71)


ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உளதோ? தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்ட விடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவர் உள்ளத்தில் உள்ள அன்பை எல்லாரும் அறியப் பறை சாற்றி விடும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)


அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர். அன்புடையாரோ பிறிதின் கிழமைப் பொருள்களை மட்டுமின்றித் தற் கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன்படுத்துவர்.

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு. (73)


பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்பொடு பொருந்திய தொடர்பை அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடை யோர்.

அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. (74)


உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும். அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டு பண்ணும்.

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. (75)


இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை, அவர் முன்பு இங்கு அன்போடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (76)


அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர். அவர் அறியார். அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை யறம். (77)


அறத் தெய்வம் அன்பில்லாத உயிரை, எலும்பில்லாத உடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. (78)


உள்ளத்தில் அன்பில்லாத உயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல், பாலை நிலத்தின்கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. (79)


இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, மற்றப் புறத்து நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. (80)


அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச சொல்லப் பெறுவது. அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே.

9. விருந்தோம்பல்

9. விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)


கணவனும் மனைவியும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம் விருந் தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82)


உண்ணப்படும் உணவு சாவை நீக்கும் மருந்தே எனினும், விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்து உண்டல் விரும்பத் தக்கதன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. (83)


நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல் வாழ்க்கை வறுமையால் துன்புற்றுக் கெடுதல இல்லை.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (84)


முகமலர்ந்து நல்ல விருந்தினரைப் பேணுவானது இல்லத்தின் கண் திருமகள் மனமகிழ்ந்து வதிவாள்.

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம். (85)


முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தான் உண்ணும் வேளாளனது நிலத்திற்கு விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை.

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)


தன்னிடம் முந்தி வந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தின ரையும் எதிர்பார்த்து அவரோடு தான் உண்ணக் காத்திருப் பான், மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக் கொள்ளப் படுவான்.

னைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். (87)


விருந்தினர்க்கு உணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று. விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். (88)


விருந்தினரைப் பேணி அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலை மேற் கொள் ளாதார், அவ்வறங்கட்குச் செலவிட வேண்டிய பொருளை நிலை யானது என்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும் பின்பு இழந்துவிட்டதனால் இன்று எமக்கு யாதொரு பற்றுக் கோடும் இல்லை என்று நொந்து கூறா நிற்பர்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. (89)


செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை. அது பேதையரிடத்திலேயே உள்ளது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)


இயல்பாக மென்மையவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப் படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும். ஆனால் தன்மானம் உள்ள விருந் தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர்.

10. இனியவை கூறல்

10. இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)


இனிய செல்லாவன அன்பு கலந்து வஞ்சனை இல்லாத மெய்ப் பொருளை அறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள்.

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின். (92)


ஒருவரைக் கண்ட பொழுதே முகமலர்ந்து இனியசொல்லும் உடையனாகப் பெறின், அது மனம் உவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம்.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (93)


ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி, பின்பு நெருங்கியவிடத்து அகமலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை உடையதே அறமாவது.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. (94)


யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்குத் துன்புறுத்தும் வறுமை இலதாகும்.

பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்(கு)
அணியல்ல மற்றுப் பிற. (95)


ஒருவனுக்கு அணியாவன அடக்கம் உடைமையும் இன்சொல் உடமையுமாம். மற்றப் பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (96)


விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து, அவற்றைச் செவிக்கு இனிதாக ஒருவன் சொல்வானாயின் அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும்.

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (97)


விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல், இம்மைக்கு நேர்பாட்டை (நீதியை) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும். (98)


விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. (99)


பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்து அறிகின்றவன் தான் மட்டும் பிறரிடத்தில் வன்சொல்லை ஆள்வது என்ன பயன் கருதியோ!

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100)


தனக்கு அறமும் பிறர்க்கு இன்பமும் பயக்கும் இனிய சொற்களும் எளிதாய் வழங்குமாறு தன்னிடத்தில் இருக்கவும், அவற்றை வழங்காது தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ் சொற்களை ஒருவன் வழங்குதல் இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவு மான கனிகளும் கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக இருக்கவும், அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றைப் பறித்து உண்டல் ஒக்கும்.

11. செய்ந்நன்றி யறிதல்


11. செய்ந்நன்றி யறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. (101)


தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருக்கும் ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவை ஈடு செய்தல் அரிது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)


ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த உதவி பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாய் இருந்தாலும், அக்கால நிலை நோக்க நிலவு லகத்திலும் பெரிதாம்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. (103)


இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்கும் என்று ஆராயாது ஒருவர் செய்த உதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின் அதன் நன்மை கடலினும் பெரிய தாம்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (104)


தினை அளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானா யினும் அதன் பயனை அறிந்தவர் அதைப் பனை அளவினதாகிய பேருதவியாகக் கருதுவர்.

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105)


கைமாறான உதவி காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகை யானும் முன் செய்த உதவி அளவினதன்று. அதனைச் செய் வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (106)


துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. (107)


தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவு உடையோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று. (108)


ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று. அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும். (109)


தமக்கு முன்பு ஒருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற பெருந் தீமைகளைச் செய்தாராயினும் அவையயல்லாம் அவர் செய்த நன்மை யயான் றையே நினைத்த மட்டில் நன்றியறிவு உடையார் மனத்தில் இல்லாமல் மறைந்து போம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)


எத்துணைப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத் தீவினைகள் நீங்கும் கழுவாய் (பிராயச் சித்தம்) உண்டாம். ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்த வனுக்கோ தப்பும் வழியே இல்லை.

12. நடுவு நிலைமை

12. நடுவு நிலைமை

தகுதி யயனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட் டொழுகப் பெறின். (111)


பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப்பெறின் நேர்மை என்று சொல்லப்படும் ஓர் அறமே நல்லதாம்.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து. (112)


நடுவுநிலைமை உடையவனது செல்வம், பிறர் செல்வம் போல் அழியாது வழியினர்க்கும் வலிமையாதலை உடையது. (வலிமை பாதுகாப்பு)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். (113)


அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும் நடுவுநிலை திறம்பு வதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (114)


இவர் நேர்மையுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உணமை அவரவருடைய மக்களால் அறியப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115)


பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால், அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாதவை அல்ல. ஆதலால் இவ் வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை, அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (116)


ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருது மாயின் அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு, ‘நான் இனிக் கேடடைவேன்’ என்று திட்டமாய் அறிந்து கொள்க.

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் அடங்கியான் தாழ்வு. (117)


நடுநிலை நின்று அறத்தின்கண் தங்கினவனது வறுமையை உயர்ந்தோர் கேடாகக் கருதார்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (118)


இயல்பாகச் சமனாக நின்று தன்கண் வைத்த பொருளின் நிறையை வரை யறுத்துக் காட்டும் துலாக்கோல் போல மனத்திற் சம நிலையாக இருந்து ஒரு பக்கஞ் சாயாது உண்மை உரைத்தல் அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். (119)


நடுவுநிலைமையாவது ஆய்ந்து கூறும் தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லதாம். அது அங்ஙனம் நிகழ்வது மனத்தின்கண் கோட்டம் இன்மையை முழுவுறுதியாகப் பெற்றவிடத்தே.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின். (120)


பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின் வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம்.

Thursday, December 26, 2019

13. அடக்க முடைமை

13. அடக்க முடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)


அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகததிற்கு கொண்டு போய்ச் சேர்க்கும். அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கு அரிய இருள் உலகத்திற்குச் செலுத்திவிடும்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு. (122)


அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்கட்கு அதனினுஞ் சிறந்து ஆக்கந் தருவது வேறொன்றும் இல்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123)


ஒருவன் அறியத் தக்க நூல்களை அறிந்து இல்லறத்தின்கண் அடங்கி ஒழுகுவா னாயின், அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த தன்மையை விளைவிக்கும்.

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (124)


இல்லறத்தின்கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி மலை உயர்ச்சி யினும் மிகப் பெரிது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. (125)


செருக்கின்றி அடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம். ஆயினும் அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. (126)


ஆமையானது, தனக்குத் தீங்கு நேராதவாறு, தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலும் ஆகிய ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளுதல் போல இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின் அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127)


மக்கள் வேறு எவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க. அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். (128)


ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றே னும் பிறர்க்கு உண்டாயின், அவன் ஏற்கனவே செய்துள்ள பிற அறங்கள் பயன்படா மற்போம்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)


ஒருவன் ஒருவனை நெருப்பினாற் சுட்ட புண், காட்சிப் பொருளாகிய உடம்மையே சுட்டதினால் அப்பொழுதேயோ அப்புண் ஆறின. பின்போ உள்ளத்தில் ஆறிவிடும். ஆயின் நாவினாற் சுட்ட புண்ணோ, கருத்துப் பொருளாகிய உள்ளத்தைச் சுட்டதினால், ஒருகாலும் ஆறாது அதன் கண்ணே நிற்கும்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130)


அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கி யயாழுக வல்லவனின் செவ்விய மனநிலையை, அறத்தெய்வம் அவனைத் தலைக் கூடுமாறு அவனை யடையும் வழிச்சென்று நுணுகி நோக்கும்.

14. ஒழுக்கமுடைமை

14. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)


ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. (132)


ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாதவாறு வருந்தியும் பேணிக்காக்க. பலவகை அறங்களையும் ஆராய்ந்து அவற்றுள் இருமைக்கும் துணை யாவதை எவ்வளவு கவனமாகத் தேர்ந்தாலும், அவ்வொழுக்கமே துணை யாக முடியும். (ஏகாம் பிரிநிலை).

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (133)


நல்லொழுக்கம் உடைமையே உயர்குலத் தன்மையாம். தீயயாழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134)


ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும். ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு, தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (135)


பொறாமை உள்ளவனிடத்திற் செல்வம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாத வனிடத்து உயர்வு இல்லை. (உயர்வு உயர்குலத்தானாதல்)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. (136)


ஒழுக்கக் கேட்டால் தமக்குக் குல இழிபாகிய கேடு உண்டாவதை அறிந்து, அறிவுடை யோர் ஒழுக்கத்தில் தளரார்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (137)


ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர்; அவ்வொழுக்கத்தினின்று தவறு தலால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயயாழுக்கம்
என்றும் இடும்பை தரும். (138)


ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந் தரும். தீயயாழுக்கம் எக்காலும் துன்பமே தரும்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். (139)


மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள் ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (140)


உயர்ந்தோரோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்ற வரேனும் அறிவிலாதாரே.

15. பிறனில் விழையாமை

15. பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்(து)
அறம்பொருள் கண்டார்கண் இல். (141)


வேறொருவன் உடமையாக உள்ளவளைக் காதலித்தொழுகும் மடமை நில வுலகத்தில் அறநூலையும், பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல். (142)


காமம் பற்றித் தீவினை செய்தார் எல்லாருள்ளும் பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண் போய் நின்றாரைப் போலப் பேதையார் இல்லை.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார். (143)


தம்மை நல்லவர் என்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின்கண் தீவினை செய்தலை விரும்பி ஒழுகுவார் உறுதியாக இறந்தாரின் வேறுபட்டவரல்லர்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். (144)


எத்துணை உயர்ந்தோராயினும் தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல் என்ன பயனுடைத்தாம்?

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (145)


பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவன் தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன் குடிப்பழியையும் அடைவான்.

பகைபாவம் அச்சம் பழியயன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். (146)


பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்துப் பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம். (கரிசு-பாவம்)

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். (147)


அற இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன், பிறனுக்கு உரிமை பூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. (148)


அறிவு நிறைந்தோர்க்கு, பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண் டகைமை அறம் மட்டுமோ, நிரம்பிய ஒழுக்கமுமாம்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோதோயா தார். (149)


அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின்கண் எல்லா நலங்களும் பெறுதற்கு உரியார் எவர் எனில் பிறன் ஒருவனுக்கு உரியவளின் தோளைத் தழுவாதார்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. (150)


ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும் பிறனாட்சிக்கு உட்பட்டவளின் பெண் தன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம்.

16. பொறை யுடைமை

16. பொறை யுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151)


தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போலத் தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (152)


பொறை நன்று ஆதலால், பிறர் செய்த மிகையை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க. இனி, அதை மனத்திற் கொள்ளாது அப்பொழுதே அடியோடு மறக்க முடியுமாயின் அது அப்பொறையினும் நன்றாம்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (153)


ஒருவனுக்கு வறுமையுள் வறுமையானது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல். அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். (154)


ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின், அவனாற் பொறையுடைமை பேணிக்காத்து ஒழுகப்படும்.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (155)


பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார். ஆனால், அத்தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக்கொள்வர்.

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (156)


தமக்குத்தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே. ஆனால் அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று. (157)


செய்யத் தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் அதனால் வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறன் அல்லாதவற்றைத் தான் அவர்க்குச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். (158)


செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரைத் தாம் தம் பொறையினால் வென்று விடுக.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். (159)


நெறிகடந்த கீழ்மக்களின் வாயினின்று வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மேன்மக்கள் இல்லறத்தின் கண் நின்றாலும் துறவியர் போல மனத் தூய்மையுடைய ராவர்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (160)


நோன்பினால் உணவைத் தவிர்த்துப் பசியையும், வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் துறவியர் மக்கட்குட் பெரியவரே. ஆயின் அவர் பெரியவராவது பிறர்சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்த படியே.

17. அழுக்காறாமை

17. அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்றன் நெஞ்சத்(து)
அழுக்கா றிலாத இயல்பு. (161)


ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை இல்லாத தன்மையைத் தன் ஒழுக்க நெறியாகக் கொள்க.

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (162)


யாரிடத்தும் பொறாமையில்லாது ஒழுகுதலை ஒருவன் பெறுமாயின் அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை ஒப்பது வேறு ஒன்றும் இல்லை.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான். (163)


இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவன் என்று சொல்லப்படுகின்றவன், பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவ னாவன்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து. (164)


அறிவுடையோர் பொறாமைகொண்டு அதனால் அறனல்லாதவற்றைச் செய்யார், அத்தீய நெறியால் தமக்கு இருமையிலும் கேடு வருதலை அறிந்து.

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது. (165)


பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வது ஆதலின், பொறாமை உள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டியதில்லை.

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும். (166)


ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டுமின்றி, அவன் உறவினரும் உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளும் இன்றிக் கெடுவர்.

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)


பிறர் ஆக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை, செங்கோலத்தினள் ஆகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டிவிட்டு நீங்கும்.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)


பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) தன்னை உடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து, மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (169)


பொறாமை மனத்தானது செல்வமும் பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும் எக்கரணியம் பற்றி நேர்ந்தன என்று ஆராயப்படும்.

அழுக்கற் றகன்றாரு இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (170)


பொறாமைப்பட்டுப் பெரியவர் ஆயினாரும் இல்லை; அக்குணம் இல்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாரும் இல்லை.

18.வெஃகாமை

18.வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிங்
குற்றமும் ஆங்கே தரும். (171)


பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமை இல்லாது அவரது நற்செல்வத்தின் மேல் ஒருவன் ஆசை வைப்பின் அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கு ஏதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)


நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர் பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்கு உண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)


பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார், அறத்தால் வருவதும் நிலையானதும் பேரளவினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடை யோர்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். (174)


ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர் ‘யாம் பொருளி லேம்’ என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (175)


உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம், அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல் களைச் செய்வாராயின்?

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (176)


அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன், பிறர் பொருளை விரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்து எண்ணிய மட்டிற் கெட்டு விடுவான்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (177)


பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க; பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லையாதலின்.

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (178)


ஒருவனது செல்வம் சுருங்காமல் இருத்தற்கு வழி எதுவெனின் அது பிறனுக்குத் தேவையான அவனது கைப்பொருளைத் தான் விரும்பாமையாம்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு. (179)


இது அறமென்று தெளிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடை யாரிடத்துத் திருமகள் தான் அடைதற்கான திறங்களை அறிந்து அவற்றின்படியே சென்றடை வாள்.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. (180)


பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின் அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; பிறன் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும்.

19. புறங் கூறாமை

19. புறங் கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. (181)


ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும் ஒருவரையும் பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப் படுதல் நன்றாம்.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)


ஒருவனைக் காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்ட விடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல், அறம் என்றே ஒன்றும் இல்லை என அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும். (183)


ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்ட விடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும் அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல், அவனுக்கு அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல். (184)


ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் இன்றிக் கடுஞ்சொற்களைச் சொல்லினும் அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். (185)


புறங்கூறுவான் ஒருவன் அறம் நல்லது என்று சொல்லினும் அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை, அவன் புறஞ்சொல் லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். (186)


பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன் தன் சொந்தப் பழி களுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப் படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (187)


மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர்.

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்
என்கைகொல் ஏதிலார் மாட்டு. (188)


தம் நெருங்கிய உறவினர் குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பு டைய வன்னெஞ்சர், அயலார் செய்தியில் எத்தகையவராவார்!

அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. (189)


பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங்கூற்றா ளனது உடலைப் பொறுத்தலை, மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பிற்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (190)


புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம் போல் தம் குற்றத்தையும் காணவல்ல ராயின் நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பம் உண்டோ?

20. பயனில சொல்லாமை

20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். (191)


அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன் எல்லா ராலும் இழிவாய் எண்ணப்படுவான்.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது. (192)


ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல், விரும்பப் படாத செயல்களைத் தன் நண்பனிடத்துக் செய்தலினுந் தீயதாம்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை. (193)


ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே அவன் நேர்மை (நீதி) இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. (194)


ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல், நேர்மையோடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். (195)


இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல் வாராயின் அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கி விடும்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யயனல். (196)


பயனற்ற சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்பவனை மகன் (மாந்தன்) என்று சொல்லற்க; மக்களுட் பதர் என்று சொல்லுக.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. (197)


அறிவுடையோர் நேர்மை இல்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக. ஆயின் எக்கரணியத்தையிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாது இருத்தலே அவர்க்கு நன்றாம்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். (198)


அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார் மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். (199)


மயக்கத்தினின்று நீங்கிய குற்றமற்ற அறிவுடையார் பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (200)


ஏதேனும் ஒன்றைச் சொல்லின் பயனுள்ள சொற்களையே சொல்லுக; சொற்களில் பயன் இல்லாதவற்றைச் சொல்லாதிருக்க.