Friday, December 27, 2019

8. அன்புடைமை

8. அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (71)


ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உளதோ? தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்ட விடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவர் உள்ளத்தில் உள்ள அன்பை எல்லாரும் அறியப் பறை சாற்றி விடும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)


அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர். அன்புடையாரோ பிறிதின் கிழமைப் பொருள்களை மட்டுமின்றித் தற் கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன்படுத்துவர்.

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு. (73)


பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்பொடு பொருந்திய தொடர்பை அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடை யோர்.

அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. (74)


உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும். அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டு பண்ணும்.

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. (75)


இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை, அவர் முன்பு இங்கு அன்போடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (76)


அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர். அவர் அறியார். அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை யறம். (77)


அறத் தெய்வம் அன்பில்லாத உயிரை, எலும்பில்லாத உடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. (78)


உள்ளத்தில் அன்பில்லாத உயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல், பாலை நிலத்தின்கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. (79)


இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, மற்றப் புறத்து நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. (80)


அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச சொல்லப் பெறுவது. அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே.

9. விருந்தோம்பல்

9. விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)


கணவனும் மனைவியும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம் விருந் தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82)


உண்ணப்படும் உணவு சாவை நீக்கும் மருந்தே எனினும், விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்து உண்டல் விரும்பத் தக்கதன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. (83)


நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல் வாழ்க்கை வறுமையால் துன்புற்றுக் கெடுதல இல்லை.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (84)


முகமலர்ந்து நல்ல விருந்தினரைப் பேணுவானது இல்லத்தின் கண் திருமகள் மனமகிழ்ந்து வதிவாள்.

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம். (85)


முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தான் உண்ணும் வேளாளனது நிலத்திற்கு விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை.

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)


தன்னிடம் முந்தி வந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தின ரையும் எதிர்பார்த்து அவரோடு தான் உண்ணக் காத்திருப் பான், மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக் கொள்ளப் படுவான்.

னைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். (87)


விருந்தினர்க்கு உணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று. விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். (88)


விருந்தினரைப் பேணி அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலை மேற் கொள் ளாதார், அவ்வறங்கட்குச் செலவிட வேண்டிய பொருளை நிலை யானது என்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும் பின்பு இழந்துவிட்டதனால் இன்று எமக்கு யாதொரு பற்றுக் கோடும் இல்லை என்று நொந்து கூறா நிற்பர்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. (89)


செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை. அது பேதையரிடத்திலேயே உள்ளது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)


இயல்பாக மென்மையவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப் படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும். ஆனால் தன்மானம் உள்ள விருந் தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர்.

10. இனியவை கூறல்

10. இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)


இனிய செல்லாவன அன்பு கலந்து வஞ்சனை இல்லாத மெய்ப் பொருளை அறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள்.

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின். (92)


ஒருவரைக் கண்ட பொழுதே முகமலர்ந்து இனியசொல்லும் உடையனாகப் பெறின், அது மனம் உவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம்.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (93)


ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி, பின்பு நெருங்கியவிடத்து அகமலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை உடையதே அறமாவது.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. (94)


யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்குத் துன்புறுத்தும் வறுமை இலதாகும்.

பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்(கு)
அணியல்ல மற்றுப் பிற. (95)


ஒருவனுக்கு அணியாவன அடக்கம் உடைமையும் இன்சொல் உடமையுமாம். மற்றப் பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (96)


விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து, அவற்றைச் செவிக்கு இனிதாக ஒருவன் சொல்வானாயின் அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும்.

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (97)


விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல், இம்மைக்கு நேர்பாட்டை (நீதியை) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும். (98)


விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. (99)


பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்து அறிகின்றவன் தான் மட்டும் பிறரிடத்தில் வன்சொல்லை ஆள்வது என்ன பயன் கருதியோ!

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100)


தனக்கு அறமும் பிறர்க்கு இன்பமும் பயக்கும் இனிய சொற்களும் எளிதாய் வழங்குமாறு தன்னிடத்தில் இருக்கவும், அவற்றை வழங்காது தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ் சொற்களை ஒருவன் வழங்குதல் இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவு மான கனிகளும் கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக இருக்கவும், அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றைப் பறித்து உண்டல் ஒக்கும்.

11. செய்ந்நன்றி யறிதல்


11. செய்ந்நன்றி யறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. (101)


தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருக்கும் ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவை ஈடு செய்தல் அரிது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)


ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த உதவி பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாய் இருந்தாலும், அக்கால நிலை நோக்க நிலவு லகத்திலும் பெரிதாம்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. (103)


இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்கும் என்று ஆராயாது ஒருவர் செய்த உதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின் அதன் நன்மை கடலினும் பெரிய தாம்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (104)


தினை அளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானா யினும் அதன் பயனை அறிந்தவர் அதைப் பனை அளவினதாகிய பேருதவியாகக் கருதுவர்.

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105)


கைமாறான உதவி காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகை யானும் முன் செய்த உதவி அளவினதன்று. அதனைச் செய் வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (106)


துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. (107)


தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவு உடையோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று. (108)


ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று. அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும். (109)


தமக்கு முன்பு ஒருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற பெருந் தீமைகளைச் செய்தாராயினும் அவையயல்லாம் அவர் செய்த நன்மை யயான் றையே நினைத்த மட்டில் நன்றியறிவு உடையார் மனத்தில் இல்லாமல் மறைந்து போம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)


எத்துணைப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத் தீவினைகள் நீங்கும் கழுவாய் (பிராயச் சித்தம்) உண்டாம். ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்த வனுக்கோ தப்பும் வழியே இல்லை.

12. நடுவு நிலைமை

12. நடுவு நிலைமை

தகுதி யயனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட் டொழுகப் பெறின். (111)


பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப்பெறின் நேர்மை என்று சொல்லப்படும் ஓர் அறமே நல்லதாம்.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து. (112)


நடுவுநிலைமை உடையவனது செல்வம், பிறர் செல்வம் போல் அழியாது வழியினர்க்கும் வலிமையாதலை உடையது. (வலிமை பாதுகாப்பு)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். (113)


அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும் நடுவுநிலை திறம்பு வதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (114)


இவர் நேர்மையுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உணமை அவரவருடைய மக்களால் அறியப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115)


பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால், அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாதவை அல்ல. ஆதலால் இவ் வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை, அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (116)


ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருது மாயின் அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு, ‘நான் இனிக் கேடடைவேன்’ என்று திட்டமாய் அறிந்து கொள்க.

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் அடங்கியான் தாழ்வு. (117)


நடுநிலை நின்று அறத்தின்கண் தங்கினவனது வறுமையை உயர்ந்தோர் கேடாகக் கருதார்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (118)


இயல்பாகச் சமனாக நின்று தன்கண் வைத்த பொருளின் நிறையை வரை யறுத்துக் காட்டும் துலாக்கோல் போல மனத்திற் சம நிலையாக இருந்து ஒரு பக்கஞ் சாயாது உண்மை உரைத்தல் அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். (119)


நடுவுநிலைமையாவது ஆய்ந்து கூறும் தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லதாம். அது அங்ஙனம் நிகழ்வது மனத்தின்கண் கோட்டம் இன்மையை முழுவுறுதியாகப் பெற்றவிடத்தே.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின். (120)


பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின் வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம்.

Thursday, December 26, 2019

13. அடக்க முடைமை

13. அடக்க முடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)


அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகததிற்கு கொண்டு போய்ச் சேர்க்கும். அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கு அரிய இருள் உலகத்திற்குச் செலுத்திவிடும்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு. (122)


அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்கட்கு அதனினுஞ் சிறந்து ஆக்கந் தருவது வேறொன்றும் இல்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123)


ஒருவன் அறியத் தக்க நூல்களை அறிந்து இல்லறத்தின்கண் அடங்கி ஒழுகுவா னாயின், அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த தன்மையை விளைவிக்கும்.

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (124)


இல்லறத்தின்கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி மலை உயர்ச்சி யினும் மிகப் பெரிது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. (125)


செருக்கின்றி அடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம். ஆயினும் அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. (126)


ஆமையானது, தனக்குத் தீங்கு நேராதவாறு, தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலும் ஆகிய ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளுதல் போல இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின் அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127)


மக்கள் வேறு எவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க. அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். (128)


ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றே னும் பிறர்க்கு உண்டாயின், அவன் ஏற்கனவே செய்துள்ள பிற அறங்கள் பயன்படா மற்போம்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)


ஒருவன் ஒருவனை நெருப்பினாற் சுட்ட புண், காட்சிப் பொருளாகிய உடம்மையே சுட்டதினால் அப்பொழுதேயோ அப்புண் ஆறின. பின்போ உள்ளத்தில் ஆறிவிடும். ஆயின் நாவினாற் சுட்ட புண்ணோ, கருத்துப் பொருளாகிய உள்ளத்தைச் சுட்டதினால், ஒருகாலும் ஆறாது அதன் கண்ணே நிற்கும்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130)


அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கி யயாழுக வல்லவனின் செவ்விய மனநிலையை, அறத்தெய்வம் அவனைத் தலைக் கூடுமாறு அவனை யடையும் வழிச்சென்று நுணுகி நோக்கும்.

14. ஒழுக்கமுடைமை

14. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)


ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. (132)


ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாதவாறு வருந்தியும் பேணிக்காக்க. பலவகை அறங்களையும் ஆராய்ந்து அவற்றுள் இருமைக்கும் துணை யாவதை எவ்வளவு கவனமாகத் தேர்ந்தாலும், அவ்வொழுக்கமே துணை யாக முடியும். (ஏகாம் பிரிநிலை).

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (133)


நல்லொழுக்கம் உடைமையே உயர்குலத் தன்மையாம். தீயயாழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134)


ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும். ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு, தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (135)


பொறாமை உள்ளவனிடத்திற் செல்வம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாத வனிடத்து உயர்வு இல்லை. (உயர்வு உயர்குலத்தானாதல்)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. (136)


ஒழுக்கக் கேட்டால் தமக்குக் குல இழிபாகிய கேடு உண்டாவதை அறிந்து, அறிவுடை யோர் ஒழுக்கத்தில் தளரார்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (137)


ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர்; அவ்வொழுக்கத்தினின்று தவறு தலால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயயாழுக்கம்
என்றும் இடும்பை தரும். (138)


ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந் தரும். தீயயாழுக்கம் எக்காலும் துன்பமே தரும்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். (139)


மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள் ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (140)


உயர்ந்தோரோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்ற வரேனும் அறிவிலாதாரே.